![பொன்னியின் செல்வன் - புது வெள்ளம் (#1) [Ponniyin Selvan - The First Floods]](https://images.gr-assets.com/books/1439201802m/6796621.jpg)
My rating: 5 of 5 stars
பல மாதங்களாக ஏதோ ஒரு சில காரணங்களினால் நான் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த பல விஷயங்களுள் , கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற புத்தகத்தைப் படிப்பதும் ஒன்றாயிருந்தது.
ஆம் கல்கி நம்மை 1000 ஆயிரம் ஆண்டுகள் முன் அழைத்துக் கொண்டு சென்று பெருமை மிக்க சோழ சிம்மாசனத்தைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சியை, படிப்பவர் மெய் மறக்க எழுதியிருக்கிறார்.
ஆதித்த கரிகாலனின் தூதனாக சுந்தர சோழருக்கும் , இளவரசி குந்தவைப் பிராட்டிக்கும் ஓலைகளைக் கொண்டு செல்லும் வாலிபன் வந்தியத்தேவனை மையமாக வைத்து பாகம் 1 படைத்திருக்கிறார் கல்கி.
சோழ நாட்டின் இயற்கை வளம் பற்றியும் சோழ சாம்ராஜ்யம் , அதன் பெருமையினைப் பற்றியும், சோழ மன்னர்கள், அவர்களது போர்த்திறன் முதலியன பற்றியும் என்ன அழகாய் வருணித்து , தமிழ்ப் பாடல்களினால் ஆங்காங்கே சுவையூட்டுகிறார்.
கதையில் வரும் பெண்கள் குந்தவை, வானதி, நந்தினி ஆகியோர் புத்தகத்தின் காகிதங்களைக் கிழித்துக் கொண்டு வந்து வாசகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் வர்ணித்திருக்கிறார் கல்கி :D
சைவ வைணவ வாய்ப் போரைப் பற்றியும் , வைணவன் பேச்சில் கெட்டிக்காரன் என்பதையும் ஆழ்வார்க்கடியான் என்கிற வைணவரைக் கொண்டு மிக சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
இளவரசியும் வந்தியத்தேவனும் மனதைப் பறிகொடுக்கும் காட்சியின் இனிமையைத் தான் நான் எவ்வாறு எடுத்துரைப்பது.
பல அதிர்ச்சி அளிக்கும் திருப்பங்களுடன்,
400 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த முதல் பாகத்தில் , 'பொன்னியின் செல்வன்'யார்? என்பதைக் கல்கி ஒரு வரியில் கூறி இரண்டாம் பாகத்திற்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
தமிழ் தெரிந்த , தமிழர்களாய்ப் பிறந்த எல்லோரும் கட்டாயம் படியுங்கள் நண்பர்களே!
பொன்னியின் செல்வன் பாகம் 1 படித்து முடிக்கும் இத்தருணத்தில் தமிழ் மொழி கற்பித்த ஆசான்களுக்கு நன்றி கூற வார்த்தையின்றி தவிக்கிறேன்!
View all my reviews
No comments:
Post a Comment